Monday, October 24, 2016

Jaffna Library - யாழ்ப்பாண பொதுசன நூலகம்


யாழ்ப்பாண பொதுசன நூலகம்


ஆயிரத்துத் தொளாயிரத்து எண்பத்தோராம் ஆண்டு ஆனி மாதம் முதலாம் நாள் நள்ளிரவு. ஊரடங்கு உத்தரவையும் மீறி அந்தக் கொடூரம் மிக்க துயரச் செய்தி யாழ் நகரரெங்கும் பரவியது. செவியுற்ற கல்விமான் பலர் நெஞ்சை இறுகப் பிடித்துக்கொண்டனர். இச்செய்தியைச் செவியில் கேட்ட மறுகணமே உயிர் நீத்தார் தாவீது அடிகள்.

எங்கும் சாம்பல் படிந்திருந்த அந்த அதிகாலைப் பொழுதில் ஊரடங்கு உத்தவை மீறியும் சிலர் கூடிக் கதறினர். ஊரடங்கு தளர்த்தப்பட பலநூறு மக்கள் அங்கு குழுமிக் குமுறினர். அந்தக் கோரக் காட்சியைக் கண்டு கண்ணீர் உகுத்தனர்.

அங்கே தமிழரது பண்பாட்டு நகரத்தின் மையத்தில் வெண்ணிறமான அழகிய மாடங்களோடு அறிவின் களஞ்சியமாய் உயர்ந்து நின்ற யாழ் பொது நூலகம் கருகிச் சிதைந்து கிடந்தது. அறிவூட்டியவையும் அறிவூட்டக் காத்திருந்தவையுமான ஆயிரக்கணக்காக நூல்கள் கருகிச் சாம்பாலாகக் காற்றில் கலந்துவிட்டிருந்தன.

அரச நிர்வாகத்தில் இயங்கிவந்த அரச நூலகத்தை அதே அரசு எரித்தழித்த துயரம் உலகில் முதற்றடவையாக நடந்து முடிந்திருந்தது.

யார் மீது யாருக்கு இந்தக் கொலைவெறி?

ஸ்ரீலங்கா தமிழருக்கு எதிராக மேற்கொண்டிருந்த அடக்குமுறைகளுக்கெதிரான ஆயுதப் போராட்டம் வளர்ச்சியடைந்திருக்காத காலம் அது.

அக்கால ஜெயவர்த்தன அரசில் அமைச்சர்களாக இருந்தவர்களும் இந்த நூலக அழிப்பின் பின்னணியில் செயற்பட்டடோர் எனக் கருதப்பட்டவர்களுமான திரு காமினி திசநாயக்காவுக்கும் திரு அத்துலத் முதலிக்கும் தமிழரது விடுதலைப் போராட்டம் பெரும் தொல்லைகள் எதையும் கொடுத்திராத காலம் அது.

ஆயினும் இரவோடிரவாகச் சீருடை அணியாத சிங்கள இனம் சார்ந்த காவல்துறை தமிழரது அறிவுக் களஞ்சியத்தை வேரோடு அழிக்க முயன்றதன் காரணம் என்ன?

பேரினவாதிகளின் கோபம் தமிழினத்தின் மீதானதாக மட்டும் இருக்கவில்லை. பிரித்தானியர் காலத்திலிருந்தே அரச நிர்வாகத் துறைகளிலும் ஏனைய தொழிகளிலும் தமிழர் சிறந்து விளங்கக் காரணமாக இருந்த தமிழது அறிவின் மீதும் ஆற்றிலின் மீதும் பேரினவாதிகள் கொண்டிருந்த நீண்டகால வெறுப்பின் விளைவே இந்த நூலக எரிப்புக்கான முதன்மைக் காரணமாகும்.

தமிழரது அறிவூற்று அவரது கடுமையான உழைப்பிலிருந்தே தோன்றுகின்றது என்ற உண்மையை அறியாத மடமைத்தனம் கொண்டதாகவே அன்றும் பேரினவாதம் இருந்தது.

பேரினவாதம்  எண்பத்தொன்றில் நடத்திய யாழ் நூலக எரிப்பும், எண்பத்து மூன்றில் மேற்கொண்ட இனவழிப்புமே பின்னாளில் ஆயுதம் போராட்டம் வலிமையடைய வலுவான காரணங்களாக அமைந்தன என்பதை சிங்களம் இன்றளவிலும் உணர்ந்திருக்க வாய்ப்பில்லை.

யாழ் நூலக எரிப்பு தொடர்பாக உலகளாவிய வகையில் எழுந்த கடுங் கண்டனங்களுக்குப் பின்னரும் தன் வரலாற்றுத் தவறை சிங்களம் உணரவில்லை என்பதற்குச் சான்றுகளாக 1984 இல் சிங்களம் மேற்கொண்ட ஹாட்லிக் கல்லூரி நூலக எரிப்பும் பின்னாளில் தமிழர் கல்வி மையங்கள் மீது தொடர்ந்த தாக்குதல்களும் உள்ளன.

யாழ் நூலகம்

அரும்பெரும் நூல்களைக் கொண்ட களஞ்சியமாக, முதியோரின் ஓய்விடமாக, அறிவுப் பசிக்கு விருந்தூட்டும் மண்டபமாக மட்டுமே இது திகழவில்லை. மத ஆலயங்கள் யாவற்றிலும் பெரிதாக, சாதி மத வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்ட ஈழத்தமிழர்களின் பெருங்கோவிலாக இந்நூலகம் திகழ்ந்தது.

யாழ்ப்பாண நூல்நிலையம் என்ற நூலுக்கு எழுதிய முன்னுரையில் எஸ். பொ. இவ்வாறு குறிப்பிடுகின்றார். “ஈழத்தமிழர்களினது மான உணர்வுகளினதும் தனித்துவ அடையாளங்களினதும் அறிவுத் தாகத்தினதும் விடுதலை வேட்கையினதும் சமூக வாழ்க்கையினதும் ஆன்மீக உபாசனையினதும் தெய்வீகக் குறியீடாக இந் நூலகம் திகழ்ந்தது” என்கின்றார்.

யாழ்ப்பாணப் பிரதேசத்தின் நூலக வரலாறு குறித்துச் சுருக்கமாக நோக்கியவாறு யாழ் நூலக வரலாற்றை அணுகுவோம்.

பதின்மூன்றாம் நூற்றாண்டில் யாழ்ப்பாண அரசை ஆட்சி புரிந்தவர் ஆரியச் சக்கரவர்த்தி என்பார் ஆவர். இவர் காலத்தில் தோற்றுவிக்கப்பட்ட சரஸ்வதி மகால் என்பதுவே வடக்கு ஈழத்தின் நூலக வரலாற்றின் தோற்றுவாய் எனக் கொள்ளலாம் என யாழ்ப்பாண நூல் நிலையம் என்ற ஆவண நூல் தெரிவிக்கின்றது.

ஆரியச் சக்கரவர்த்திகளின் வழியில் தோன்றிய பரராசகேகரம், செகராசகேகரன், அரசகேசரி என்போர் தமிழுக்குப் பெருந்தொண்டாற்றினர். செகராசசேகரன் காலத்தில் காலத்தில்தான் செகராசகேகரம் என்ற மருத்துவ நூலும் சேகராசசேகர மாலை என்ற சோதிட நூலும் வெளிவந்தன. இவர் காலத்தில் தமிழ்ப்புலவர் சங்கம் ஒன்று நல்லூரில் இயங்கி வந்ததாகத் தெரிகின்றது. இக்காலத்தில் சரஸ்வதி மகால் பெரும் எண்ணிகையில் நூல்களைக் கொண்டிருந்ததாகவும் புலவர் பெருமக்கள் அவற்றைப் பயன்படுத்தியதாகவும் இந்த ஆவண நூல் தெரிவிக்கின்றது.

யாழ்ப்பாணத் தமிழரசின் வீழ்ச்சிக்குப் பின் பல நூல்களும் நூல்நிலையங்களும் அழிந்து போயின. போத்துக்கேயர, ஒல்லாந்தர் போன்றோர் சுதேசிகளின் மொழி, மதம், பண்பாடு என்பவற்றை அழித்து தமது மொழி ,மதம் போன்றவற்றைத் திணிப்பதிலேயே முனைப்பாக இருந்தனர்.

பிரித்தானியர் ஆங்கிலம், கிறித்தவம் போன்வற்றைப் பேணியபோதும் தமிழரது மொழி மதம் சார்ந்த பேணல்களுக்கும் உதவினர். நூலகங்களை அமைத்தும் நூல்களை வெளியிட்டும் உதவினர். இந்திய மொழிகளிலேயே அச்சேறிய முதல் மொழியாகத் தமிழும் அச்சடிக்கப்பட்ட முதல் தமிழ்த் தாளாக இலங்கை வர்த்தமானியும் திகழ்ந்தன. இலங்கையில் வெளியாகும் அனைத்து வெளியீடுகளும் பிரித்தானிய அருங்காட்சியகத்திலும் இலங்கை அருங்காட்சியகத்திலும் இருக்க வேண்டும் என்ற விதியை 1885ம் ஆண்டு ஏற்படுத்தினர்.

இதன் விளைவாக வெளியான அனைத்து நூல்களினது விபரங்களும் வர்த்தமானியின் ஐந்தாவது பக்கத்தில் இடம்பெற்றன.

இந்த வெளியீட்டு விபரத் திரட்டைத் தொடர்ந்து நூலகங்கள் அமைக்க வேண்டும் என்ற கருத்தும் வலுப்பெற்றது. ஆட்சி மன்றங்கள் யாவும் மக்களின் வரிப்பணத்தில் நூலகங்களை அமைக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர். இவ்வாறுதான் பிரித்தானியர் ஆட்சிக்காலத்தில் நூலகங்கள் தோன்றத் தொடங்கியிருந்தன.

அப்போதிருந்த யாழ்ப்பாண பட்டினசபையும் (ருனுஊ) தமக்கென பொது நூலகமொன்றை ஏற்படுத்தியது. அதுவே பின்னாளில் வளர்ந்து பெரு நூலகமானது.

இந்த நூலகத் தோற்றத்துக்கு முன்பாக ஆயிரத்து எண்ணூற்றி நாற்பத்தியிரண்டாம் ஆண்டு (1842) பொதுமக்கள் நூல்நிலையம் என்ற பெயரோடு ஒரு நூல்நிலையம் யாழ்ப்பாணத்தில் தொடங்கப்பட்டிருந்தது. எவ்.சி. கிறினியர் என்ற ஒரு நீதிமன்றப் பணியாளர் இந்த வாசகசாலையைத் தோற்றுவித்திருந்தார். இந்நூலகம் பெருமளவில் பயன்படுத்தப்படவில்லை. காலப்போக்கில் அழிந்துபோய்விட்டது.


யாழ் நூலகத் தோற்றத்துக்கு வித்திட்ட க. மு. செல்லப்பா

அச்சுவேலியைச் சேர்ந்த திரு. க. மு செல்லப்பா என்பார் யாழ் நீதிமன்றப் பணியாளராகக் கடமையாற்றியவராவர். இவர் தான் வாடகைக்குத் தங்கியிருந்த கந்தர்மடப் பகுதியில் ‘முன்னேற்ற நூற்றுவர் கழகம்’ ( வுhந pசழபசநளளiஎந hரனெசநன)  என்ற அமைப்பைத் தோன்றுவித்து இளைஞர்களுக்கு வாசிக்கும் பழக்கத்தை ஊட்டினார்.

பொது நூலகம் ஒன்றை உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் அவர் நெஞ்சில் தீயாகக் கனன்றுகொண்டிருந்தது. நூலகத்தை அமைக்க வேண்டுமானால் கணிசமான நிதி வேண்டும். மக்களிடத்தே பணம் திரட்டுவதென முடிவு செய்து அதற்கான விண்ணப்பங்களை அச்சிட்டு எங்கும் வழங்கினார். ‘யாழ்ப்பாணத்துக்கு ஒரு மத்திய வாசகசாலையும் நூற்கழகமும்’ (யு ஊநவெசயட குசநந வுயஅடை டுiடிசயசல in துயககயெ) என்பதே விண்ணப்பத்தின் தலைப்பாக இருந்தது.

நூலகம் ஒன்றுக்கான தேவையை தமிழர் இருக்குமிடம் யாவும் சென்று உணர்த்தினார். உருக்கம் மிக்க வேண்டுகோள் பலவற்றைத் தொடர்ச்சியாக விடுத்தார். இவரது கடும் உழைப்பு பல கல்விமான்களைத் தூண்டிவிட்டது.

நூல்நிலையம் ஒன்றைத் தோற்றுவிக்கும் முனைப்போடு ஒன்றிணைந்த பல அறிஞர், ஆர்வலர் என்போர் மத்திய கல்லூரி மண்டபத்தில் ஆனி 9, 1934 அன்று கூடினர். அங்குதான் முதன்முதலில் நூலக சபை உருவானது. இச்சபையின் தலைவராக திரு சி. குமாரசுவாமி அவர்களும் துணைத் தலைவராக வணபிதா. கலாநிதி ரி. ஐசாக் தம்பையா அவர்களும் தெரிவாயினர். இணைச் செயலாளர்களாக வழக்கறிஞர் சி. பொன்னம்பலம் அவர்களும் நீதிமன்றச் சக்கடத்தார் க.மு. செல்லப்பா அவர்களும் பொறுப்பேற்றனர்.

இக் கூட்டத்தில் முடிக்குரிய வழக்கறிஞர் திரு கனகசபை அவர்கள் நூலக உருவாக்கத்தைப் பிரேரணை ஒன்றின் மூலம் முன்மொழிந்தார்.

“வுhயவ ய உநவெசயட கசநந வுயஅடை டுiடிசயசல யளளழஉயைவழைn டிந கழசஅநன றiவா வாந ழசபைiயெட ளரடிளஉசiடிநசள யனெ ழவாநசள றாழ யசந pசநளநவெ யவ வாளை அநநவiபெ யள ழசபைiயெட அநஅடிநசள ழக வாந யளளழஉயைவழைn.”

இதுவே நூலகத் தோற்றத்துக்கு வித்திட்ட முதற் பிரேரணையாகும்.

இக் கூட்டத்தில் கணக்கு அறிக்கையோடு நூலகத்தினது நோக்கங்களையும் வெளியிட்டார் க.மு செல்லப்பா அவர்கள். மத்திய இலவச தமிழ்நூல் வாசகசாலைச் சங்கம் எனப் பெயர் பெற்றிருந்த இந்த நூலக சபையின் அன்றைய நோக்கங்களைத் தெரிந்து கொள்ளுதல் நூலக வரலாற்றை அறிய விழைவோருக்கு அவசியமானது.

1. தமிழ்க்கல்வியை மறுமலர்ச்சி செய்து ஊக்கப்படுத்தி வளர்த்தல்

2. பொதுமக்களிடையே வாசிக்கும் பழக்கத்தை ஊக்கப்படுத்தல்

3. பழைய ஓலைச்சுவடிகளான ஏடுகளை விலை கொடுத்து வாங்கி பக்குவப்படுத்தி பயன்செய்தல்

4. தமிழ்மொழி சம்பந்தமான ஆராய்ச்சி முயற்சிகளை ஊக்கப்படுத்தி வசதி வாய்ப்பு நல்குதல்.

5. தமிழ்மொழியில் உள்ள நூல்களை வேறு மொழிகளில் பெயர்;;த்து எழுதியும் பிற மொழிகளில் உள்ள நூல்களைத் தமிழில் பெயர்த்து எழுதியும் பயன் செய்தல்.

6. யாழ்ப்பாணத்தில் ஒரு மத்திய இலவச தமிழ் நூலகத்தையும் வாசகசாலையையும் அமைத்து நடத்துதல். நூலகம் உடனுதவும் தன்மையில் பிரதானமாகத் தமிழ் நூல்களைக் கொண்டதாகவும் ஓரளவு ஆங்கிலம், சிங்களம், சமஸ்கிருதம், பாளி நூல்களைக் கொண்டதாகவும் இயங்குதல்.

இச்சங்கம் இவ்வாறான முதன்மையான ஆறு நோக்களைத் தொடக்கத்திலேயே கொண்டிருந்தது.

இருபத்தியொரு வயதுக்குட்பட்ட ஆண் பெண் இருபாலாரும் மாதமொன்றுக்கு 25; சதம் செலுத்தி அங்கத்தவராகலாம் எனவும் இக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

இவற்றோடு பல துணை விதிகளும் இணைக்கப்பட்டு நூலக வாசகசாலை  நிர்வாக யாப்பு உருவாக்கப்பட்டு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.

தொடர்ந்து பலரது கடும் உழைப்பினால் நூல்கள் சேகரிக்கப்பட்டன. சி. என். இராசரத்தினம் என்பார் சேகரிக்கப்பட்ட நூல்களைப் பட்டியலிட்டுத் தொகுத்து நேர்த்தியாக அடுக்கி வைத்தார்.

இதைத் தொடர்ந்து மத்திய இலவச தமிழ்நூல் நிலையச் சங்கத்தினரின் நிர்வாக சபைக் கூட்டம் 27-8-1934 அன்று நடைபெற்றது. அங்கு பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அவற்றில் முதன்மையானது,

‘ஆஸ்பத்தி வீதியில் மின்சார நிலையத்துக்குத் தென் பகுதியில் ஒரு கடையை வருடாந்தம் முந்நூறு ரூபாய்க்கு வாடகைக்கு எடுத்து 1-8-1934 முதல் பயன்படுத்த வேண்டும்’ என்பதாகும்.

திட்டமிட்டபடி மத்திய இலவச தமிழ்நூல் வாசகசாலைச் சங்கத்தால் தொடங்கப்பட்ட நூலகம் பலரது ஆதரவோடு சிறப்பாக இயங்கத் தொடங்கியது.

நூலகத்தை யாழ் நகரசபை பொறுப்பேற்றல்

மத்திய இலவச தமிழ்நூல் வாசகசாலைச் சங்கத்தினர் நூலகத்தை உருவாக்கி நடத்தும் வேளையில் யாழ் நகரசபையும் நூலக உருவாக்கம் பற்றிச் சிந்திக்கத்  தொடங்கியிருந்தது. தொடர்ச்சியாக நூல்நிலைத்தைப் பேணி வளர்க்க வேண்டுமெனில் வலுவான பின்னணி வேண்டும் என்ற கருத்து சங்கத்தாரிடமும் இருந்தது.

அவ்வேளை நகரசபை உறுப்பினராக இருந்த திரு சுப்பிரமணியம் என்பார் மத்திய இலவச தமிழ்நூல் வாசகசாலைச் சங்கம் நடத்தும் நூலகத்தை நகரசபை பொறுப்பேற்க வேண்டும் என்ற பிரேரணையைக் கொண்டுவந்தார்.
அதேவேளை நூலகத்தை நகரசபையிடம் ஓப்படைக்கலாம் என்ற என்ற பிரேரணை மத்திய இலவச தமிழ்நூல் வாசகசாலைச் சங்கத்தாலும் நிறைவேற்றப்பட்டது.

இதற்கமைய 1;-1;-1935இல் இந்த நூலகத்தை யாழ்ப்பாண நகரசபை பொறுப்பேற்றது. அவ்வேளை நூலகத்தில் 844 நூல்கள் இருந்துள்ளன. நகரசபை பொறுப்பேற்ற பின் நூலகராகப் பதவியேற்றவர் ஏற்கனவே அனுபவம் பெற்றிருந்த திரு சி. என். இராசரத்தினம் ஆவர். இவர் அப்போது பெற்ற மாத ஊதியம் நாற்பது ரூபாய். இவர் நூலக வளர்ச்சிக்குப் பெரும் பணி ஆற்றினார்.

நூலகம் ஒன்றைத் தொடங்க வேண்டும் என்ற உயர்ந்த நோக்கை இலக்காகக் கொண்டு அதனைத் தொடங்கி நகரசபையிடம் ஒப்படைத்த பின் தம் பணி முடிந்ததென மத்திய இலவச தமிழ்நூல் வாசகசாலைச் சங்கம் கருதியது. 1935ம் ஆண்டு வைகாசி மாதமளவில் இச்சங்கம் கலைக்கப்பட்டது.

அங்கத்தவர் மற்றும் நூல்களின் பெருக்கம் காரணமாக நூல்நிலையம் கச்சேரியின் ஒரு பகுதிக்கு இடமாற்றம் செய்யப்பட்டது. புதிய இடமும் பொருத்தமாக அமையவில்லை. நகரசபைக்குச் சொந்தக் கட்டடம் ஏதும் இல்லாததால் வாடகைக்கே வேறு இடம் தேட வேண்டியிருந்தது.

பிரதான வீதியில் இருந்த அபூபக்கர் கட்டடத்தில் விலாசமான முகப்புக் கடையொன்றை வாடகைகுப் பெற்று நூலகத்தை மீண்டும் இடம் மாற்றினர். இதற்கு மாதாந்தம் 35 ரூபாய் வாடககையாகச் செலுத்தப்பட்டது. இந்த இடம் விலாசமாக இருந்த போதும் சத்தம் சந்தடி நிறைந்தாக இருந்தமை நூலகப’ பயன்பாட்டுக்கு இடையூறாக இருந்தது.

நூலகத்துக்கான அமைதியான சூழலை மீண்டும் தேடத் தொடங்கிய நகரசபையார் வாடி வீட்டுக்கருகில் புதிய இடமொன்றைக் கண்டுபிடித்தனர். அவ்விடத்தில் இருந்த புத்தூர் மழவராயர் குடும்பத்துக்குச் சொந்தமாக இருந்த கட்டடத்தின் மேல் மண்டபத்தை மாதம் அறுபத்தைந்து ரூபாவுக்கு வாடகைக்குப் பெற்றனர்.

பெரிதாகவும் அமைதியாகவும் இருந்த இந்த மண்டபத்தில் 1936 முதல் நூலகம் நல்ல முறையில் நடைபெற்று வந்தது. இந்த இடத்தில் நூலகம் நல்ல வளர்ச்சி கண்டது எனலாம்.

நூல்களை இரவல் கொடுக்கும் முறை இங்கு கொண்டுவரப்பட்டது. அங்கத்துவ விண்ணப்பம் முழுமையாக நிரப்பப்பட்டு, இருவரது நட்சாட்சிப் பிணையொப்பம் பெறப்பட்ட பின்னர் அங்கத்தவருக்கு அங்கத்துவ இலக்கம் வழங்கப்பட்டது.

நூலக வளர்ச்சியில் விடுமுறையே எடுக்காது ஒப்பற்ற பணியாற்றிய திரு சி.என் இராசரத்தினம் 1947 இல் ஓய்வு பெற்றார். தொடர்ந்து திரு கந்தையா நாகரெத்தினம் என்பார் நூலகராகப் பொறுப்பேற்றார்.

தொடர்ந்து வந்த காலப்பகுதியில் பலவாயிரம் நூல்கள் நூலகத்திற்காகச் சேகரிக்கப்பட்டன. வணபிதா கலாநிதி ஐசாக் தம்பையா அவர்களின் நூற் பங்களிப்பு மகத்தானது. 6000க்கு மேற்பட்ட நூல்களை இவர் மட்டுமே வழங்கியுள்ளார்.


புதிய நூலகக் கட்டடம்

பிரித்தானியர்1865 முதல் மாநகரசபை என்னும் தகுதியைக் கொழும்பு, கண்டி, காலி ஆகிய நகரங்களுக்கு மட்டுமே வழங்கியிருந்தனர். யாழ்ப்பாணம் 1931ம் ஆண்டிற்தான் பட்டினசபை (ரசடியn னளைவசiஉவ உழரnஉடை) என்னும் தகுதியைப் பெற்றது. 1938இல் நகரசபையாக வளர்ச்சி கண்டு 1949ம் ஆண்டிற்தான் மாநகரசபையாகத் தரமுயர்ந்தது.

பிரித்தானிய வரைபுகளுக்கமைய மாநகர முதல்வர் ர்ளை றுழசளாipகரட வுhந ஆயலழச எனப்பட்டார். யாழ் மாநகரசபையின் முதல் முதல்வராகத்  தெரிவு செய்யப்பட்டவர் திரு சாம் சபாபதி அவர்கள் ஆவர்.

தன் கடமைகளோடு நூலகத்தை மேம்படுத்தும் பொறுப்பும் இவருக்கிருந்தது. இலங்கை பிரித்தானியரிடமிருந்து விடுதலை பெற்றதைத் தொடர்ந்து உலக அரசியல் போக்குகள் மாற்றமடைந்தன. மக்களின் வாழ்வும் இன, மொழி சார் உணர்வுகளும் மேலோங்கின. இந்நிலையில் தமிழர்களுக்கெனத் தனித்துவமான பண்பாட்டுப் பின்னணியோடு கூடிய பாரிய நூலகம் ஒன்று அமைதல் வேண்டும் எனத் திரு சாம் சபாபதி அவர்கள் கருதினார்.

சாம் சபாபதி அவர்களின் இக்கருத்தோடு  சம்பத்தரிசியார் கல்லூரியின் முதல்வராக இருந்த வணபிதா  லோங் அடிகளாரும் கச்சேரியின் செயலராக இருந்த திரு முருகேசம்பிள்ளையும் உடன்பட்டனர். யாழ்ப்பாணக் கல்விமான் பலரும் உற்சாகத்துடன் இக்கருத்தை வரவேற்றனர்.

தன் கருத்துக்குக் கிடைத்த வரவேற்பைக் கண்ட திரு சாம் சபாபதி அவர்கள் 16-6-1952 இல் பகிரங்கக் கூட்டம் கூட்டிக் கலந்து பேசினார்.

மிகச் சிறந்த நூலகம் ஒன்று அமைக்கப்பெற வேண்டும் என்ற கருத்து கூட்டத்தில் வலிமை பெற்றது. தனித்துவமான கட்டடம் அமைத்து நூலகத்தைப் பேணுவது என்ற முடிவு எடுக்கப்பட்டது. அக்கூட்டத்திலேயே யாழ்ப்பாண மத்திய நூல்நிலைய சபை என்னும் அமைப்பு உருவாக்கப்பட்டது. சபையின் தலைவராகச் சாம் சபாபதி அவர்களும் துணைத்தலைவராக லோங் அடிகளார் அவர்களும் தெரிவு செய்யப்பட்டனர்.

அக் கூட்டத்தில் லோங் அடிகளார் “நாம் அமைக்கப்போகும் இந்த நூல்நிலையம் தென்கிழக்காசிய நாடுகளுக்கே ஒளியூட்டும் தரம் உள்ளதாகும்” என்று கூறிய கூற்று நினைவு கொள்ளத்தக்கது.

எரியூட்டப்பட்ட நூலகத்தின் உருவாக்கத்துக்குப் பின்னால் லோங் அடிகளார் ஆற்றிய பங்களிப்பு மகத்தானது. அவர் எப்போதுமே அதிகம் பேசுவதில்லை. ‘குயவாநச டுழபெ ளாயடட டிந ளாழசவ’ என்றுதான் பலரும் கூறுவர். அவர் செயலூடாகவே பெரிதும் வெளிப்படுவார். நூலக சபை மேற்கொண்ட முடிவுகளை உடனடியாகவே செயற்படுத்தத் தொடங்கினார அடிகளார்;.
உலகளாவிய வகையில் நூலக நிபுணர்களுடன் தொடர்புகளை ஏற்படுத்தினார். பரந்த நூலக முன்னறிவைப் பெற்றார். டெல்லி பல்கலைக்கழக நூலகர் பேராசிரியர் கலாநிதி எஸ். ஆர். ரங்கநாதன் அவர்களை யாழ்ப்பாணத்துக்கு வரவழைத்து ஆலோசனை பெற்றார்.

நூலகக் கட்டடத்தை எங்கு கட்டுவது என்பது குறித்து நூலக சபைக்குள் பல்லேறு கருத்துகள் நிலவின. சபையினரால்; ஒருமனதாக ஓரிடத்தைக் கண்டறிய முடியாதிருந்தது.

இறுதியில் நகர் நிர்மாண நிபுணர் திரு வீரசிங்கா அவர்களின் ஆலோசனையைப் பெறுவதென சபை முடிவு செய்தது. வீரசிங்கா அவர்கள் யாழ் நகரை நன்கு ஆய்வு செய்தபின் நகரின் மையத்தில் முனியப்பர் கோவிலுக்குக் கிழக்கே இருந்த முற்றவெளியே நூலகம் அமைக்கச் சிறந்த இடம் எனத் தெரிவித்தார். கட்டடக்கலை நிபுணர் திரு நரசிம்மனும் இதுவே சிறந்த இடம் என்றார்.

யாழ். நூலகக் கட்டட அமைப்பைத் திட்டமிட்டவர் கட்டடக் கலைஞர் திரு நரசிம்மன் ஆவர். தமிழ்ப் பண்பாடு இந்துப் பண்பாடு என்பவற்றை மனதிற்கொண்டு பொறியியல் தொழில் நுட்பத்தோடு வரைகலையூடாகக்  கட்டிடத்தை வடிவமைத்தார். அமையப்போகும் நூலகத்தின் மாதிரி வடிவமைப்பை 16-10-1953 அன்று நூலக சபையிடம் வழங்கினார்.

இதைத் தொடர்ந்து செயல்வீரரான சாம் சபாபதி உடனடியாக கட்டட வேலைகளைத் தொடங்கினார். 23-3-1954 அன்று இந்து சமய முறைப்படி இக்கட்டடத்துக்கான அடிக்கல் நாட்டுவிழா நடைபெற்றது. இந்த அடிக்கல் நாட்டுவிழாவில் பிரித்தானிய தூதுவர் சேர் செசில் சையெஸ், அமெரிக்கத் தூதுவர் எச். இ. பிலிப் குறோவ், இந்திய தூதுவரின் முதற் செயலாளர் சித்தாத்த சாரி போன்றோரும் கலந்து கொண்டிருந்தனர்.

அவ்வேளை கட்டிட நிதியாக அமெரிக்கா 22000 டொலரையும் இந்தியா 10000 ரூபாயையும் வழங்கியது.

இக்கட்டடம் முடிக்கப்படும்வரை நூலகம் மழவராயர் மண்டபத்திலேயே சிறப்பாக இயங்கி வந்தது. பயனாளரின் கருத்துகளை அறிவதற்காக குறிப்பேடு ஒன்றை அங்கு வைக்க ஏற்பாடு செய்தார் சாம் சபாபதி அவர்கள். அந்தக் குறிப்புகளைத் தவறாது வாசித்து ஆவன செய்யவும் அவர் தவறவில்லை.

நூலகரான திரு க. நாகரெத்தினம் அரிய நூல்களையும் சஞ்சிகைகளையும் சேகரித்தார். அவரது பணி நூலக வளர்ச்சிக்குப் பெரும் துணை செய்தது.
கட்டடப் பணிகளைத் தொடங்க வேண்டுமெனில் முதலில் ஐந்து இலட்சம் ரூபாய் கையிருப்பில் இருக்க வேண்டும் எனச் சாம் சபாபதி கருதினார். லோங் அடிகளாரின் அனுபவம் மிக்க ஆலோசனைக்கிணங்க நிதி திரட்டுவதற்காக களியாட்ட விழா நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்தக் களியாட்டவிழா 1952. 1954, 1959, 1963 ம் ஆண்டுகளில் நான்கு தடவைகளாக நடத்தப்பட்டு நிதி சேகரிப்;பட்டது. சாம் சபாபதி அவர்களின் திட்டமிடலில் அதிட்ட இலாப சீட்டிழுப்பும் நடத்தப்பட்டது. அப்போதே பரிசுகளாக மூன்று கார்களைச் சில நிறுவனங்கள் வழங்கியிருந்தன.

கட்டடப் பணிகள் ஒருபுறம் நடைபெற்றுக்கொண்டிருக்க மறுபுறம் வளர்ச்சியடைந்து கொண்டிருந்த மழவராயன் மண்டபத்தில் இயங்கிய நூலகம் 17-10-58 முதல் யாழ்ப்பாண பொதுசன நூல்நிலையம் எனப் பெயர் பெற்றது.

சாம் சபாபதி அவர்கள் நூலக உருவாக்கத்தில் பெரும் பங்காற்றிய போதும் மாநகர முதல்வராக அவர் பணியாற்றிய காலத்தில் கட்டடப் பணிகள் நிறைவடையவில்லை.

சாம் அவர்களைத் தொடர்ந்து அல்பிரட் துரையப்பா அவர்கள் மாநகர முதல்வராகப் பொறுப்பேற்றார். தன் முன்னோர் காட்டிய வழியில் அவரும் நூலக வளர்ச்சிக்குப் பெரும் பங்காற்றினார். கட்டட நிதிக்காக 1959 இல் நடத்தப்பட்ட களியாட்ட விழாவைத் துரையப்பா அவர்களே முன்னின்று நடத்தினார்.

இந்த நிதி திரட்டலுக்குப் பின் கட்டடப் பணிகளைத் துரிதப்படுத்திய துரையப்பா அவர்கள் நில மண்டபத்தின் ஒரு பகுதி வேலைகள் முற்றுப்பெற பெரிதும் உதவினார். பழைய நூலகத்தின் இட நெருக்கடி காரணமாக புதிய கட்டிடத்துக்குக் குடிபுகும் ஏற்பாடுகள் வேகமாக நடைபெற்றன.

11-10-1959 அன்று திரு அல்பிரட் துரையப்பா அவர்கள் யாழ்ப்பாண பொதுசன நூலகத்துக்கான புதிய கட்டடத்தைத் திறந்து வைத்தார்.

நூலகம் புதிய கட்டடத்தில் குடிபுகுந்த காலத்தில் பதினாறாயிரம் நூல்களும் நூற்றைம்பது வகையான சஞ்சிகைகளும் இருந்தன.

கட்டடத்தின் நில மண்டபத்தில் புதிய பொலிவோடு நூலகம் இயங்கலாயிற்று. அக்காலத்தே பலரும் நூலக வளர்ச்சிக்குப் பேருதவி புரிந்தனர். இவர்களில் கோப்பாய் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வன்னியசிங்கம், வவுனியாவைச் சேர்ந்த பண்டிதர் இராசஐயனார், வெள்ளவத்தை முதலியார் குல. சபாநாதன் போன்றோர் முதன்மையானோராவர்.

நூலகர் வே. இ. பாக்கியநாதன்

சிறந்த கல்விமானும் அமெரிக்காவில் உள்ள அட்லாண்ரா பல்கலைக்கழகத்தில் நூலகத்துறையில் முதுமானிப் பட்டம் பெற்றவருமான திரு வே.இ. பாக்கியநாதன் 28-8-1964 அன்று யாழ்ப்பாண பொதுசன நூலகத்தின் நுலகராகப் பொறுப்பேற்றார். அதுவரை நூலகராகப் பணிபுரிந்த திரு நாகரெத்தினம் துணை நூலகராகப் பணியைத் தொடர்ந்தார்.

பாக்கியநாதன் அவர்களின் உயரியநோக்கு நூல்கள் சேகரிப்பதாகவே இருந்தது.  நூல்களோடு பழைய பனைஓலை ஏடுகளையும் தேடிப் பாதுகாத்துப் பயன்படுத்த முயன்றார். முன்னாள் உள்ளுராட்சி அமைச்சராகவிருந்த திரு மு. திருச்செல்வம் அவர்கள் பல மருத்துவ ஏடுகள் நூலகத்துக்குக் கிடைக்க வழி செய்தார்.

தொடர்ச்சியாக, இந்த நூல்நிலையம் எவ்வாறெல்லாம் நிர்வகிக்கப்பட வேண்டும், எத்தகைய இலக்குகளை எட்ட வேண்டும் என்ற விளக்கங்கள் அடங்கிய ஓர் அறிக்கையைத் தயார் செய்து அப்போது மாநகர முதல்வராவிருந்த எஸ்.சி. மகாதேவா அவர்களிடம் கையளித்தார். அந்த அறிக்கை தொடர்பான கூட்டம் 8-10-1964 அன்று நடைபெற்றது.

மிகச் சிறந்த நூலகத்துக்காக நடைமுறைகளைப் பரிந்துரை செய்த அந்த அறிக்கை பெரிதும் ஏற்றுக்கொள்ளப்பட்டதெனலாம். பல பகுதிகளைக் கொண்ட அந்த அறிக்கையின் ஏழாம் பகுதி கட்டடத்தை முழுமையாகக் கட்டி முடிப்பதாகும். இவ்வாறான மாற்றங்களுடன் பெருஞ் சிறப்புற்றுத் திகழ்ந்தது யாழ் நூலகம். நூற்றுக்கணக்கானோர் என்பதைக் கடந்து ஆயிரக்கணக்கானோர் பயன்படுத்தும் பெரு நூலகமாக யாழ் நூலகம் தோற்றங்கண்டது.

திரு எஸ்.சி. மகாதேவா காலத்தில் முதல் மாடியைக் கட்;;ட பெருமுயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஆணையாளராகவிருந்த டி. டி. ஜெயசிங்க அவர்களும் பின்னர் விசேட ஆணையாளராகப் பொறுப்பேற்றிருந்த திரு மாணிக்கவாசகர் அவர்களும் கட்டடப் பணிகள் நிறைவடைய உதவினர். கட்டடப் பொறியியலாளர்களான திரு நடேசன், திரு வைத்தியிலிஙகம் என்போரும் தமிழ்ப்பண்பாட்டுடன் மிளிரும் கையில் கட்டட வடிவமைப்புக்கு மெருகூட்டினர்.

திரு பாக்கியநாதன் அவர்களின் மற்றுமொரு பணி வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. அக்காலப்பகுதியில் நான்காம் குறுக்குத் தெருவில் அமெரிக்க அரசின் ஆதரவில் ஒரு தகவல் நூல் நிலையம் இயங்கி வந்தது. அங்கு அருமையான தகவற் களஞ்சியங்கள் இருந்தன. சிறந்த தளவாடங்கள், கருவிகள், படச்சுருள்கள், திரைப்படக் கருவிகள் என்பனவும் பயன் தரும் வகையில் இருந்தன.

இந்த நூலகத்தைப் பாராமரிப்பதில் சிரமங்களை எதிர்கொண்ட அமெரிக்க அரசினர் இலங்கை அரசிடம் கையளிக்க முயன்றனர். இதை அறிந்த சிலர் இப் பொருட்களைக் கண்டிக்குக் கொண்டு செல்ல முயன்றனர்.

இந்த நூலகம் யாழ்ப்பாண நூலகத்துடனேயே இணைய வேண்டும் எனத் துடியாய்த் துடித்து, ஆணையாளர் திரு மாணிக்கவாசகர் மூலமாக இந்த அமெரிக்க நூலகத்தை யாழ்ப்பாண பொதுசன நூலகத்துடன் இணைத்தார். அமெரிக்க நூலகம் நூலகத்தின் மேல்மாடியின் வடக்குப் பக்க மண்டபத்தில் இயங்கத் தொடங்கியது. இந்த இணைப்பு நிகழ்வில் கலந்து கொண்ட அமெரிக்கத் தூதுவர் அன்ட்ரு கொரி பேசுகையில் “அமெரிக்க யாழ்ப்பாண உறவுக்கு நூலறிவே காரணம்” எனக் குறிப்பிட்டிருந்தார்.

முழுமைத்துவம் பெற்ற நூலகம்

முழுமைத்துவம் பெற்று இயங்கி வந்த இந்த நூலகத்தில் 33 பேர் பணியாற்றினர். மொத்தம் 15,910 சதுரஅடி பரப்பளவைக் கொண்ட இந்நூலகம் கொழும்பு மாநகரசபையின் பழைய நூலகத்தை விடப் பெரிது. புதிய நூலகத்துக்கு அடுத்தபடியாக இது உள்ளது.

வடமகாணத்தில் இயங்கிய அனைத்து நூலகங்களுக்கும் இதுவே தலைமை நூலகமாகத் திகழ்ந்தது. இந்நூலகத்தில் பின்வரும் அங்கங்கள் சிறப்புற இயங்கின.

நூல் இரவல் வழங்கும் பகுதி
புதிய ஏடுகளையும் சஞ்சிகைகளையும் கொண்ட வாசகசாலை
சிறுவர் நூலகம்
உசாத்துணை நூலகம்
கருத்தரங்கக் கூடம்
கலாபவனம்
காரியாயலமும் நூற்சேமிப்பு அறையும்

எரிப்பிற்கு முன்னால் ஏறக்குறைய 95,000 நூல்களைக் கொண்டிருந்த இந்த நூலகத்தைப் மாணவர் பெரியோர் என பல்லாயிரக்கணக்காணோர் பயன்படுத்தி வந்துள்ளனர். 17,000 பேர் அங்கத்தவர்களாக பதிவு பெற்ற பயனாளிகள் ஆவர்.

இரவலுக்கு வழங்கப்படாத உசாத்துணைக்கு மட்டுமே பயன்படுத்தப்பட்ட நூல்கள் 29,000 ஆகும். இவை எளிதில் எங்கும் பெற முடியாத அரிய நூல்களாகும். இவை அனைத்துமே கருகிப் போயின என்பது வரலாற்றுத் துயரமாகும்.

இந்த நூலகத்தின் சிறுவர் பகுதி தனிச்சிறப்பு மிக்கது. திரு பாக்கியநாதன் அவர்களால் வடிவமைக்கப்பட்ட மிகச் சிறந்த பகுதி இது. இங்கு 8995 சிறுவர் நூல்கள் இருந்திருக்கின்றன. அவற்றைப் பயன்படுத்தி அறிவைமேம்படுத்தியோர் இன்று உலகெங்கும் வாழக் கூடும். ஆனால் அந்த நூல்களில் ஒன்று கூட எஞ்சியிருக்கவில்லை.

கல்விமான்களும் ஆர்வலரும் ஐம்பது ஆண்டுகளாகச் சிறுகச் சிறுக இட்ட பேருழைப்பு இந்த நூலகம். தமிழர் தலைநகரின் மையத்தில் தலைநிமிர்ந்து நின்ற பண்பாட்டுக் கோபுரம். ஈழத்தின் இணையற்ற கலைக்கோவில்.

1983 இல் பொன்விழா கொண்டாடியிருக்க வேண்டிய பொழுதில் தமிழர் நெஞ்செங்கும் துயரமே பொங்கிக் கிடந்தது.


1981 மே 31ம் நாள் நடந்தது என்ன?

அது யாழ்ப்பாண மாவட்டசபைத் தேர்தல் பரப்புரைகள் உச்சம் தொட்டிருந்த காலம். தேர்தல் பாதுகாப்புப் பணிகளுக்காகச் சிங்களக் காவலரும் படையினரும் பணியாளர்களும் தெற்கிலிருந்து மேலதிகமாக வரவழைக்கப்பட்டிருந்தனர்.

1981 மே 31ம் நாளன்று நாச்சிமார் கோவிலுக்கருகில் தமிழர் விடுதலைக் கூட்டணியினரது பரப்புரைக் கூட்டம் நடைபெற்றுக்கொண்டிருந்தது. அவ்வேளை இங்கு இடம் பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இரு சிங்களக் காவலர் கொல்லப்பட மற்றொருவர் காயமடைந்தார்.

இந்த சம்பவத்தினால் கொதிப்படைந்த சிங்களத் தரப்பினர் மிக மோசமான வன்முறைகளில் ஈடுபட்டனர். சீருடை அணியாத காவலர், படையினர், சிங்களப் பணியாளர் பலரும் பெருந்திரளாக வந்து பல இடங்களுக்குத் தீ மூட்டினர். அவ்வேளை நடைமுறைப்படுத்தப்பட்ட ஊரடங்குச் சட்டம் வெறியருக்குப் பெரு வாய்ப்பாக இருந்தது.

நாச்சிமார் கோவில் தேரைச் சிதைக்க முற்பட்டனர். தேர்க் கொட்டகை,{ கோபுரக் கொட்டகை போன்றவற்றை எரித்தனர். கோவிலையும் சேதமாக்க முயன்றனர். புத்தகக் கடைகள் எரிக்கப்பட்டன. ஈழநாடு நாளிதழ் அலுவலகம் முற்றாக எரிக்கப்பட்டது.  தமிழர் விடுதலைக் கூட்டணியின் அலுவலகம் தீக்கிரையாக்கப்பட்டது. அப்போதைய யாழ்ப்பாண நாடாளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரனின் வீட்டுக்குத் தீ வைக்கப்பட்டது. அவருடைய வாகனமும் எரிக்கப்பட்டது. ஆறுக்கும் அதிகமான பொதுமக்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

யாழ்ப்பாணத்தில் இந்த வன்முறைகள் நடைபெற்ற வேளை ஸ்ரீலங்கா அமைச்சர்களான திரு காமினி திசநாயக்கா திரு அத்துலத் முதலி என்போர் யாழ்ப்பாணத்திலேயே தங்கியிருந்தனர். அவ்வேளை யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்த ஓர் அமெரிக்கச் செய்தியாளர் தன் பதிவொன்றில் குறிப்பிட்டிருக்கின்றார்.

இவர்கள் உத்தரவிலும் மேற்பார்வையிலுமே இந்த வன்முறைகள் இடம்பெற்ற என்ற கூற்றை மறுப்பதற்கில்லை.

மறுநாள் யூன் முதலாம் திகதியும் சிங்கள இனவாதிகளின் வன்முறைகள் தொடர்ந்தன. தமிழரது அறிவூற்றான நூலகம் அவர்கள் கண்களை உறுத்தியது. இரவுப் பொழுதிற்காகக் காத்திருந்த காடையர் வேளை வந்ததும் யாழ் நூலகத்துக்குள் நுழைந்தனர். தடுத்து நிறுத்திய காவலாளியை நெட்டித் தள்ளினர். கைவசம் கொண்டுவந்த எரிபொருட்களைக் கொண்டு நூலகத்தின் ஒவ்வொரு பகுதியாகப் பார்த்துப் பார்த்துத் தீவைத்தனர். பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டதாகவும் சில சாட்சியங்கள் இருக்கின்றன.

நூலகத்தின் மேற்கு மூலை பகுதிதான் முதலில் எரியத் தொடங்கியது. அதன் தொடர்ச்சியாக நூலகத்தின் அடுத்தடுத்த பகுதிகளும் எரியத் தொடங்கின.

நூலகம் எரிந்துகொண்டிருக்கும் செய்தி மாநகரசபை ஆணையாளர் சிவஞானத்துக்குக் கிடைத்தது. பதறித் துடித்த அவர், உடனடியாக தீயணைப்பு வீரர்களையும் மாநகரசபை ஊழியர்களையும் நூலகத்துக்கு அனுப்பினார். தீயை அணையுங்கள், ஆவணங்களைக் காப்பாற்றுங்கள் என்று உத்தரவிட்டார். அதன்படி நூலகத்தை நெருங்கிய தீயணைப்பு வீரர்களைத் தடுத்து நிறுத்தினர் சிங்களக் காவலர்.

நூலகத்தின் ஒவ்வொரு அங்குலமும் அழிந்துகொண்டிருந்தது.

அங்கு சேமித்து வைக்கப்பட்டிருந்த 95,000க்கு மேற்பட்ட நூல்கள் கருகிச் சிதைந்தன. மருத்துவம், இலக்கியம், சோதிடம் உள்ளிட்ட துறைகளைச் சார்ந்த நூல்கள், ஓலைச்சுவடிகளில் எழுதப்பட்ட ஆவணங்கள் அனைத்தும் சாம்பலாகின. கலாநிதி ஆனந்த குமாரசுவாமி நூற்தொகுதி, சி. வன்னியசிங்கம் நூற்தொகுதி, ஐசாக் தம்பையா நூற்தொகுதி, கதிரவேற்பிள்ளை நூற்தொகுதி, அமெரிக்காவில் இருந்து நன்கொடையாக வந்திருந்த நூற்தொகுதிகள் ஆகியன அழிந்து போன அறிவுக் களஞ்சியங்களில் அதிமுக்கியமானவையாகும்.

மீள் கட்டமைப்பு

1981 மே மாதம் 31ம் நாள் நள்ளிரவுக்குப் பின் எரியூட்பட்ட நூலகத்தை மீண்டும் கட்டுமானம் செய்யும் பணிகள் உடனடியாகவே தொடங்கப்பட்டன எனலாம்.

பாராளுமன்ற உறுப்பினர், பேராசிரியர். கல்லூரி முதல்வர், உலகெங்கும் வாழ்ந்த தமிழர,; பல்வேறு நிறுவனங்கள், மாநகரசபை போன்றோர் கொடுத்த நெருக்கடியால் இலங்கை அரசு திருத்த வேலைகளுக்காக இருபது இலட்ச ரூபாயை ஒதுக்கியது. அப்போது மாநகர முதல்வராக இருந்த இராசா விசுவநாதன் மீள்கட்டுமான முயற்சிகளை முன்னெடுத்தார்.

மீள்கட்டுமானப் பணிகளுக்கான பொறியியலாளராகத் திரு நடேசன் நியமிக்கப்பட்டார். பணிகள் வேகமாக முன்னெடுக்கப்பட்டன.  நூல்களும் மீண்டும் சேகரிக்கப்பட்டன. கிடைத்த ஓரளவான நூல்களுடன் 1984ம் ஆண்டு யூன் மாதம் 4ம் நாள் நூலகம் மீண்டும் பொதுமக்கள் பயன்பாட்டுக்காகத் திறக்கப்பட்டது. திரு அப்பாத்துரை அமிர்தலிங்கம் அவர்கள் இதனைத் திறந்து வைத்தார்.

கட்டடம் திருத்தப்பட்டாலும் நூல்களால் இப்போதும் நிறைவடையாத நூலகமாகவே இது இருந்து வருகின்றது. அரிய சிறந்த நூல்களின் வருகைக்காக இது இப்போதும் காத்திருக்கின்றது.

எரிக்கப்பட்ட ஹாட்லி கல்லூரி நூலகம்

பேரினவாதிகளின் வெறித்தனத்தை வெளிப்படுத்திய மற்றுமொரு நூலக அழிப்பு ஹாட்லிக் கல்லூரி நூலகம் முற்றாக எரியூட்டப்பட்ட நிகழ்வாகும்.
1984 செப்ரெம்பர் 16ம் நாள் ‘திக்கம்’ பகுதியில் ஒரு காவலர் கொல்லப்பட்டதை அடுத்து அரச படையினர் ஆறுக்கு மேற்பட்ட பொதுமக்களைக் கொன்றதுடன் பல கடைகளுக்கும் தீ மூட்டினர். தமிழரது அறிவின் மீது தீரா வெறுப்புக் கொண்டிருந்த பேரினவாதம் ஹாட்லிக் கல்லூரி கட்டிடங்களுக்குத் தீ மூட்டியது. அவர்களது பிரதான இலக்கு நூலகமாகவே இருந்தது.

இத் தீ மூட்டலையடுத்து ஆயிரக்கணக்கான நூல்கள் எரியுண்டதுடன் பழமை வாய்ந்த ஹாட்லிக் கல்லூரியின் மீளப் பெறமுடியாத ஆவணங்கள் பலவும் எரிந்து போயிருந்தன. அவற்றுடன் பெறுமதியான அறிவியல் ஆய்வு கூடக் கருவிகளும் அழிந்து போயின.

கனடா ரொரான்ரோவில் தமிழர் வகைதுறை வளநிலையம் நடத்தி வந்த தேடகம் என்ற சிறு நூலகம் இனந்தெரியாதோரால் 1994 மே 23ம் நாள்; எரியூட்டப்பட்டது. நூற்றுக்கணக்கான நூல்கள் இதில் எரியுண்டன.

2009 இல் வன்னிப் பகுதியில் ஸ்ரீலங்கா அரசு முன்னெடுத்த யுத்தம் முள்ளிவாய்க்காலில் முடிவுற்ற போது சிறியதும் பெரியதுமான பல நூலகங்கள் அழிவுற்றிருந்தன. அவற்றில் பேரழிவைச் சந்தித்தது கிளிநொச்சி பொதுசன நூலகமே. இந்நூலகம் இந்த யுத்தத்தின் போது பலவாயிரம் நூல்களை இழந்துள்ளது.

தமிழரது போராட்டத்தினது அடிப்படைகளை விளங்கிக் கொள்ளாது தமிழரது அறிவு மையங்களை அழிக்க முயன்ற இனவெறிச் செயல்களே பின்னாளில் தமிழரது போராட்டங்களை வலிமைப்படுத்தின.


உலக வரலாறில் அழிக்கப்பட்ட நூலகங்கள்.

யாழ் நூலகம் எரிக்கப்பட்டதைப் போன்றே உலக வரலாற்றில் பல நூலகங்கள் எரிக்கப்பட்டுள்ளன. எதிரியைப் பழி தீர்க்க முயல்கின்ற  பகைவர் கல்வி நிலையங்களையும் நூலகங்களையும் அழிக்க முயல்கின்ற கொடூரம் உலக வரலாறுகளிலும் இடம் பெற்றுள்ளன. சில வரலாற்று அழிவுகள் கீழே பட்டியலாகத் தரப்பட்டுள்ளன.



Name of Library
Country
Date of Destruction
Perpetrator
Xianyang Palace and State Archives
Qin China
206 BC
Xiang Yu
Ancient library Alexandria
Ancient Egypt
48 BC
Disputed
Library of Antioch
Ancient Syria
364 AD
Emperor Jovian[8]
Egypt Alexandria Pompeys Pillar.
Ancient Egypt
392 AD
Theophilus of Alexandria
Library of Ctesiphon
Ancient Persia
651 AD
Arab Invaders
Library of al-Hakam II
Al-Andalus
976 AD
Al-Mansur Ibn Abi Aamir & religious scholars
Library of Rayy
Persia
1029 AD
Sultan Mahmud of Ghazni
Library of Ghazna
Ghurid empire
1151 AD
'Ala ad-Din Husain
Library of Nishapur

1154 AD
Oghuz Turks
Nalanda University India ruins.
India
1193 AD
Muhammad bin Bakhtiyar Khilji
Imperial Library of Constantinople
Byzantine Empire
1204 AD
The Crusaders
House of Wisdom
Iraq
1258 AD
Mongol Invaders
Granada madraza2.jpg
Granada
1499 AD
Crown of Castile
Bibliotheca Corviniana
Ottoman Empire
1526 AD
Troops of the Ottoman Empire.
Glasney College
England
Royal officials
1548 AD
Dresden Codex p09.jpg
Yucatán
1562-07-12 AD
Mexico and Guatemala
Raglan Castle Gatehouse and library
Raglan Castle
1646 AD
Wales
BurningofWashington1814.
Washington, D.C.
1814 AD
United States
University of Alabama
United States
1865-05-04 AD
Troops of the Union Army
Third Anglo-Burmese War A.
Mandalay Palace
1885 - 1887 AD
Burma
Hanlin Academy Library
China
1900-06-23/4
international defending forces.
Louvain Library WWI.jpg
Leuven
1914-08-25
Belgium
Four Courts Conflagration.jpg
Ireland
1922 AD
Provisional Government forces
1933-may-10-berlin-book-burning
Berlin
1933-05-??
Nazi Germany
Institut für Sexualwissenschaft
Nazi Germany
1933-05-??
Members of the Deutsche Studentenschaft
National University of Tsing Hua, University Nan-k'ai,
Institute of Technology of He-pei, Medical College of He-pei, Agricultural College of He-pei,
University Ta Hsia, University Kuang Hua, National University of Hunan
China
1937 – 1945 AD
World War II Japanese Troops
Louvain Library WWI.jpg
Leuven
Belgium
1940-05-?? AD
Bombed National Library Belgrad.JPG
Belgrade
Yugoslavia
1941-04-06 AD
SS. Cyril and Methodius National Library
Bulgaria
Allied bombing Allied air forces
1943-1944 AD
Lebanese National Library
Lebanon
1975
Lebanese Civil War
National Library of Cambodia
Cambodia
1976 – 1979 AD
The Khmer Rouge[22]
Tamilnet.com picture of burned Jaffna Library
Jaffna
1981-06-01 AD
Sri Lanka
Picture of burned Sikh Reference Library
Punjab
1984-06-07 AD
India
Libraries of Fisheries and Oceans Canada
Canada    
2013 AD
Government of Canada headed by prime minister Stephen Harper




தற்போது கிளர்ச்சிகள் செய்துவரும் ஐஎஸ்ஐஎஸ் என்ற இஸ்லாமிய தீவீரவாத இயக்கம் நூலகங்களையும் கல்வி நிலையங்களையும் கடந்த இரு ஆண்டுகளாகப் பெருமளவில் அழித்து வருகின்றது.

இன்னும் பல நூலகங்களும் கல்வி நிறுவனங்களும் அழிக்கப்பட்ட குறிப்புகள் இருப்பினும் விரிவு கருதி சில தகவல்கள் மட்டுமே மேலே தரப்பட்டுள்ளன.

உலகலாவிய வகையில் மனிதகுல மேம்பாட்டுக்கும் வரலாற்றுப் பேணல்களுக்கும் புதிய ஆய்வுகளுக்கும் தளமாகவும் களமாகவும் இருப்பன நூலகங்களே. ஒரு நூலகத்தின் அழிவானது மனிதகுல வளர்ச்சியை சில நூற்றாண்டுகளுக்கே பின்தள்ளி விடும் அபாயங் கொண்டவையாகும். எதிர்காலத் தலைமுறையினருக்கான பேரறிவுப் பெட்டகங்கள் இந்த நூலகங்களிலேயே பேணப்படுகின்றன.

யுத்தங்கள் எவ்வகையான கொடுமைகளைக் கொண்டிருந்த போதும் அறிவு மையங்களின் அழிவு என்பது எப்போதுமே தவிர்க்கப்பட வேண்டிதொன்றாகும். ஐ.நாவின் போர் விதிகளும் இதை வலியுறுத்துகின்றன.

உலகெங்கும் தனித்துவமான இனங்கள் பல தமது நிலம், மொழி, கலை, மதம், பண்பாடு சார்ந்த அனைத்து வரலாறுகளையும் ஆவணங்களாகவும் நூல்களாகவும் குறித்த சில நூலகங்களிலேயே பாதுகாத்து வருகின்றன. போரோ அல்லது இயற்கை அழிவுகளோ அவற்றைப் பாதிக்கும் வாய்ப்புகள் உள்ளன. எனவே அவற்றைப் பாதுகாக்கப் புதிய தொழில் நுட்பங்களைக் கண்டறிந்து அவற்றைக் கையாளுதல் வேண்டும்.

பிற்குறிப்பு:

இக்கட்டுரையை எழுதுவதற்கு எனக்குப் பெரிதும் துணை புரிந்த நூல் “யாழ்ப்பாண நூல் நிலையம் ஓர் ஆவணம்” என்ற நூலாகும். இதில் இடம் பெற்ற பல கடடுரைகளை எழுதியவர் யாழ்ப்பாண பொதுசன நூலகத்துடன் இரண்டறக் கலந்து வாழ்ந்த மூதறிஞர் திரு க.சி. குலரத்தினம் அவர்கள். இக்கட்டுரையில் நான் குறிப்பிட்ட தகவல்கள் பெரும்பாலானவை இவர் குறிப்பிட்டவையே. அத்துடன் வரைகலைக் கலைஞர் கருணா இக்கட்டுரைக்கு உதவவல்ல பல இணையத்தளங்களைக் கண்டறிந்து உதவினார். இருவருக்கும் என் நன்றி.

உதவிய நூல்களும் இணையத் தளங்களும்:

                            “யாழ்ப்பாண நூல் நிலையம் ஓர் ஆவணம்” - திரு க.சி. குலரத்தினம்
                                http://en.wikipedia.org/wiki/List_of_destroyed_libraries