Thursday, April 5, 2018

சங்கத் தமிழரின் ‘குடிப்’ பெருமை


ஒரு விருந்து நடந்து கொண்டிருந்தது. ஒரு பிரபலமான பெண் கவிஞர் அங்கு வந்திருந்தார். எவ்வகையாய்ப்; பட்டியலிட்டாலும் தமிழின் முக்கிய மற்றும் தவிர்க்க முடியாத பெண் கவிஞர் அவர்தான். இலக்கியம், அரசியல் என அங்கிருந்தவர்கள் அவருடன் பேசிக்கொண்டிருந்தார்கள்.

நிகழ்வை ஏற்பாடு செய்தவர் ஒரு அரசியற் தலைவர். கவிஞர்கள் இருக்குமிடத்தில் மது இல்லாமலா? போதையை நிரப்பியபடி சிறியதும் பெரியதுமாகப் பல்வகைப் புட்டிகள் அங்கு வைக்கப்பட்டிருந்தன.

முதலில் சிறிய அளவில் போதை ஏற்றக்கூடிய மதுவகைகள் பரிமாறப்பட்டன. ஆயினும் கூடியிருந்தோரின் தாகம் தீர்ந்தபாடில்லை. பாம்புக்கடிபோல் போதையேற்றக் காத்திருந்தோருக்கு மெது‘மது’ எறும்புக்கடியாக இருந்தது.

ஏற்பாட்டாளர் கள நிலவரத்தைப் புரிந்து கொண்டு பெரும் போதைதரும் மதுப் புட்டிகளைத் திறந்தார். விருந்து அமர்க்களப்பட்டது. பலவாறாக ஆக்கப்பட்ட சோற்றுவகைகளும் அங்கு நிறைந்திருந்தன.

கவிஞரும் அரசியல் தலைவரும் ஒன்றாக மதுவருந்தியபடி பேசிக்கொண்டிருக்கின்றனர். அவர்களுக்கு முன் தணலில் வாட்டிய இறைச்சி (டீ டீ ஞ அநநவ) இருக்கிறது. எலும்போடு கூடிய இறைச்சித்துண்டுகளை தலைவர் பெண் கவிஞருக்குக் கொடுக்கின்றார்.

இறைச்சியைச் சுவைத்தபடியும் மது அருந்திக்கொண்டும் இருவரும் இலக்கியம் பேசிக்கொண்டிருக்கின்றனர்.

கதையோடு கதையாகக் கைகளில் படிந்த இறைச்சி சற்றே கவிஞரின் கூந்தலிலும் படிகின்றது. இறைச்சியின் மணம் வீசிய அக்கூந்தலைக் கோதி விடுகின்றார் அரசியல் தலைவர். 

இது அண்மையில் நடந்த முற்போக்கு இலக்கியச் சந்திப்பின் பினனர்; ஏற்பாடு செய்யப்பட்ட விருந்தல்ல.

ஏறக்குறைய இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் நடந்த விருந்து.

விருந்துக்கு வந்திருந்த அந்தப் பிரபல கவிஞர் ஒளவையார். விருந்தை ஏற்பாடு செய்த அவருடைய நண்பர், அரசர் அதியமான்.


சிறியகட் பெறினே யெமக்கீயு மன்னே
பெரியகட் பெறினே
யாம்பாடத் தான்மகிழ்ந் துண்ணு மன்னே
சிறுசோற் றானு நனிபல கலத்தன்மன்னே
பெருஞ்சோற் றானு நனிபல கலத்தன்மன்னே
என்பொடு தடிபடு வழியெல்லா மெமக்கீயு மன்னே
அம்பொடு வேனுழை வழியெல்லாந் தானிற்கு மன்னே
நரந்த நாறுந் தன்கையாற்
புலவு நாறு மென்றலை தைவரு மன்னே” (235 புறுநானூறு)

என்ற ஒளவையின் புறநானூற்றுப் பாடலே மேற்கூறப்பட்ட நிகழ்ச்சிக்காக இலக்கியச் சாட்சி.

அதியமான் இறந்தபோது அவனது பிரிவுத்துயரால் வருந்திய ஒளவையார் அதியமானோடு தொடர்புபட்ட நிகழ்வுகளைத்  தொடுத்து இப்பாடலைப் பாடியிருக்கின்றார்.

“சிறிய அளவில் போதை ஏற்றுகின்ற கள் கிடைக்கின்றபோதும் எமக்குத் தருபவன். பெரும் போதை ஏற்றுகின்ற கள் கிடைத்தபோதும் எமக்குத் தந்து நாம் பாடக் கேட்டுத் தானும் அருந்துபவன். சிறிய அளவில் சோறு கிடைத்தாலும் பெருமளவில் சோறு கிடைத்தாலும் தந்துதுண்பவன். என்போடு கிடைக்கும் இறைச்சித்துண்டுகளையும் எமக்காகத் தருபவன். அம்பும் வேலும்கொண்ட போரக்;களத்திலும் போய் நிற்பவன். நாரத்தம் பூ மணக்கும் தன் கையால் புலால் மணம் வீசும் எம் கூந்தலையும் கோதி விடுபவன்” என்பதே இப்பாட்டின் பொருளாகும்.

இச் செய்தியில் நாம் வியப்பதற்கு ஒன்றுமில்லை. அக்காலத்தில் மன்னரைப் போலவே மதுவும் மக்களோடு இரண்டறக் கலந்ததாகவே இருந்தது.

பல்வேறு இலக்கியச் செய்திகள், கட்டுரைகள் வழியாகப் பெறப்பட்ட தகவல்களை அடிப்படையாகக் கொண்டு இக்கட்டுரை எழுதப்படுகின்றது. இக்கட்டுரையின் நோக்கம் நம் முன்னோரது மதுப்பயன்பாடு பற்றிய அறிவை வெளிப்படுத்துவதேயன்றி மது விரும்பிகளுக்கு மகிழ்ச்சியூட்டுவதல்ல. சிலவேளை இக்கட்டுரையின் பக்கவிளைவாக அது அமையலாம். அவ்வாறாயின் அது எம் தவறல்லவே.

பல தளங்களிலும் உயர்நிலை பெற்றிருந்த சங்ககாலத் தமிழர் போதை ஏற்றவல்ல மதுவகைகளைப் பெருமளவில் பயன்படுத்தியிருக்கின்றனர். அவர்களது மதுப்பயன்பாடு இதுவரை நாம் அறிந்திராத பல புதிய செய்திகளை வெளிப்படுத்துகின்றது. மது பற்றி எம் முன்னோர் கொண்டிருந்த பேரறிவு எம்மை வியக்கச் செய்கின்றது.

பழந்தமிழர் வாழ்வில் மது அன்றாடப் பயன்பாட்டுக்குரிய பொருளாவே கருதப்பட்டிருக்கின்றது. சங்க இலக்கியங்களான புறநானூறு, அகநானூறு, பொருநராற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, மலைபடுகடாம், நற்றிணை, பதிற்றுப்பத்து, மதுரைக்காஞ்சி போன்ற இலக்கியங்களில் தமிழர் பயன்படுத்திய மதுக்கள் குறித்துப் பல செய்திகள் விரிவாகக் காணப்படுகின்றன. அகழ்வாய்வுகளில் கண்டெடுக்கப்பட்ட பலவகையான மதுச்சாடிகளும் குடிப்பழக்கப் பழமைக்குச் சான்று தருகின்றன.

மக்களது வாழ்வில் ஒரு பொருளுக்குப் பலவகையான சொற்கள் பயன்படுத்தப்பட்டிருக்குமானால் அப்பொருள் மக்கள் நடுவே பெருஞ்செல்வாக்குப் பெற்றிருக்கவேண்டும் என்பர் அறிஞர்.  பண்டைத் தமிழர் வாழ்வியலில் மதுவகைகளும் அவற்றிற்கான பெயர்களும்பலவாறாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன.

மதுவுக்கு நம் முன்னோர் வழங்கிய பெயர்ப்பட்டியல் இதோ,

தேக்கள்
தேறல்
நறவு
மட்டு
சொல்விளம்பி
தோப்பி
கள்
நறும்பிழி
பூக்கமழ் தேறல்
மணங்கமழ் தேறல்
கலங்கல் கள்
மது

இச்சொற்கள் அனைத்துமே மதுவைக் குறிப்பதாயினும், ஒவ்வொரு பெயரும் தனித்துவமான ஒரு வகை மதுவையே குறித்து நின்றது என்ற செய்தி வியப்பை ஏற்படுத்துகின்றது.

மது வகையறாக்களைத் தாமே வடித்துத் தனித்துவம் விளங்கப் பெயரிட்டிருக்கும் தமிழரது மது பற்றிய தெளிவான அறிவைக் கீழ்க்
காணும் செய்திகளால் அறியலாம்.

நெல்லாற் சமைத்த கள் வகைகள் நறவு எனவும்,வடிக்கப்பட்ட கள் வகைகள் தேறல் எனவும்  அழைக்கப்பட்டன.மரங்களில் இருந்து பெறப்பட்டவை பிழி எனப்பட்டன. கள் என்பதை எல்லா வகையான மதுக்களுக்குமுரிய பொதுச்சொல்லாகவே பயன்படுத்தினர்.

தேக்கள்

சிறந்த தேனைப் பெற்று அதை மூங்கில் அரிசியோடு கலந்து மூங்கில் குழாய்களில் இட்டு நிலத்தடியில் புதைத்து வைப்பர். நாட்கள் செல்லச் செல்ல பதனப்படுத்திய இத்தேனில் சுவையேறும். தீஞ்சுவையோடு போதையையும் கொண்ட இத்தேனே தேக்கள் என்றழைக்கப்பட்டது. குறிஞ்சி நிலத்தோர் இத் தேறலை அருந்தி முருகனை வழிபட்டார்கள் எனத்திருமுருகாற்றுப் படை (அடி 195) கூறுகின்றது.

நறும்பிழி அல்லது நறவு

குற்றாத கொழியில் அரிசியைக் களி போன்று துழாவிக் கூழாக்குவர். பின் அதனை வாயகன்ற தாம்பாளம் போன்ற தட்டுப் பிழாவில் ஊற்றி ஆற்றுவர். பின் நெல் முனையை இடித்து அக்கூழிற் கலப்பர். கலந்த இக்கூழினைக்குடத்தில் வைத்து இரு இரவும், இரு பகலும்தொடாமல் பாதுகாத்து வைப்பர்.  நன்கு ஊறிய பின்பு விரலாலே அரிப்பர். இவ்வாறு அரிக்கப்படும் கள் மிகுந்த சுவையினை உடையதாக இருக்கும். நறும்பிழி எனப்படும் இக்கள்ளினை வலையர்கள் உண்டு மகிழ்ந்தனர் என்னும் செய்தியினைப் பெரும்பாணாற்றுப்படையில் காணலாம்.

பெண்ணைப் பிழி

அக்காலத்தே பனை மரங்களையே பெண்ணை மரம் என அழைத்தனர். பனையில் இருந்து பெறப்பட்ட கள்ளே ‘பெண்ணைக் பிழி’ எனப்பட்டது.  காவிரிப்பூம்பட்டினத்தில் வாழ்ந்த பரதவர்கள் பனங்கள்ளைப் பருகிய செய்தியைப் பட்டினப்பாலை கூறுகின்றது.

மதுக்குழம்பு

பலவகை மதுக்களைத் தயாரிப்பதற்கு மூலக்கலவையாக மதுக்குழம்பு என்னும் பொருள் பயன்படுத்துப்பட்டிருக்கின்றது.
கூறு மிக்க அரிசியையும் பனை மரத்தின் பெருங்குரும்பையையும்; (நுங்குக்கு முந்தைய நிலை) கொண்டு8 லிட்டர் அளவான கூழ் காய்ச்சிப் பின்,21.5 லிட்டர் அளவான உளுந்தை ஊற வைத்த தண்ணீரோடு கலப்பர். இதுவே மதுக்குழம்பு எனப்பட்டது.

தோப்பி

முன்னோர் வீடுகளிலேயே வெகு இயல்பாகக் கள் வடித்திருக்கின்றனர். இக்கள் ‘தோப்பிக்கள்’ என்று என அழைக்கப்பட்டது. ‘தொப்பி நெல்’என இன்றும் அழைக்கப்படுகின்ற நெல் கொண்டு இக்கள் உருவாக்கப்பட்டது.
‘ஒரு தூணி நீர்(21.5 லிட்டர்) அரை மரக்கால்(4 படி) அரிசி, மூன்று படி
மதுக்குழம்பு ஆகியவற்றின் கலவை கொண்டே தோப்பி வடிக்கப்படல் வேண்டும்’ என பெரும்பாணாற்றுப்பபடை (அடி 42) குறிப்பிடுகின்றது.

தேறல்

பல்வகையான தேறல்களை அக்காலத்தில் தயாரித்தனர். பன்னிரண்டு மரக்கால் மா, ஐந்து படி மதுக்குழம்பு புத்திரகமரத்தின் பட்டை,கனிகள்,மணக்கூட்டு போன்றவற்றின் கலவையிருந்து தேறல் தயாரிக்கப்பட்டிருக்கின்றது.

பிழி

பிழி எனப்படும் ஒருவகை மதுவைச் சுவைபடக் காய்ச்சியிருக்கின்றனர்.
ஒரு துலை விளம்பழம், ஐந்து துலை பாகு (செறிவாகக் காய்ச்சப்பட்ட சர்க்கரை) ஒரு படி தேன் இவைகளுடைய கலவையால்பிழி உருவாக்கப்பட்டிருக்கின்றது.

சாராயம்

பிற்கால இலக்கியமொன்றில் சாராயம் வடிக்கும் முறையும் குறிக்கப்ட்டிருக்கின்றது.ஆடு திண்ணாப்பாளை, திப்பிலி ஆகியவற்றின் சாற்றைக் கொதிக்க வைத்து,அதனோடு கருப்பஞ்சாறு, வெல்லம், தேன்பாகு, நாவற்பழச்சாறு பலாப்பழச்சாறு என்பவற்றுள்; ஒன்றைக் கலந்து அதை ஆறு மாதமோஓராண்டோ பாதுகாத்து வைத்துப் பின்னர்  அதனோடு வெள்ளரிப் பழம், கரும்பு,மாம்பழம், நெல்லிக்கனி என்னுமிவற்றின் சாற்றோடு கலந்தேனும் கலவாமலேனும் உருவாக்கப்பபடுவன சாரயாய வகைகளாகும்.

பூக்கமழ் தேறல்:

செல்வந்தர்களின் மாளிகைகளிலும் அரண்மனைகளிலும் பூக்கமழ் தேறல்பறிமாறப்பட்டிருக்கின்றது. பொற்கிண்ணங்களில் தேக்கள், தேறல் போன்றவற்றில் இஞ்சி, குங்குமப்பூ போன்ற மணங்கமழும் பூக்களை இட்டுத் உருவாக்கப்படுவதே ‘பூங்கமழ் தேறல்’ ஆகும். அரசர்கள் இத்தகைய தேறலை உண்டு மகிழ்ந்த வரலாற்றை மாங்குடி மருதனார் மதுரைக் காஞ்சியில் குறிப்பிடுகிறார்.

ஒராண்டு வரை ஊற வைக்கப்படும் மது வகைகள் தலையாயது என்றும், ஆறு மாதங்கள் வரை ஊற வைக்கப்படும் மது வகைகள் இடையாயது என்றும், ஒரு மாதம் வரைஊற வைக்கப்படும் மது வகைகள் கடையாயது என்றும் அழைக்கப்பட்டிருக்கின்றன.

இரவுப்பொழுதில் ஆடவரும் பெண்டிரும் இணைந்து அருந்துகின்ற கள் காம பானம் எனப்பட்டிருக்கின்றது. மணங்கமழ் தேறல், பூக்கமழ் தேறல் என்பன இரவுப்பொழுதுக்குரிய மது வகைகளாகப் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.

தென்னை, பனை போன்றவற்றில் இருந்து பெறப்பட்ட கள் ‘கலங்கல் கள்’ எனவும் அழைக்கப்பட்டிருக்கின்றது. இக்கலங்களில் இருந்து வடிக்கப்பட்ட கள்iயும் தேறல் என அழைத்தனர். கலங்கல் கள் போதை அதிகம் கொண்டதாகவும்,அதிலிருந்து வடிக்கப்பட்ட தேறல் போதை குறைவானதாகவும் இருந்திருக்கின்றது.

‘அரசன் தமக்குப் போதை மிக்க கலங்கல் கள்ளைத் தந்தும், தேறலைத் தான் அருந்தியும் தம்மை மகிழ்வித்தான்’ எனப் போர்வீரர்கள் கூறும் செய்தியை,

“எமக்கே கலங்கல் தருமே! தானே தேறல் உண்ணு மன்னே”(புறம் 298)

என்ற புறநானூற்றுப் பாடல் ஒன்றால் அறிலாம்.  மன்னன் கலங்கல் கள்ளை வீரர்களுக்கு வழங்கிய அதேவேளை போதை குறைந்த தேறலைப் புலவர்களுக்கும் பாணர்களுக்கும் வழங்கியிருக்கின்றான் என்ற செய்தியைப் பதிற்றுப்பத்து தெரிவிக்கின்றது. அறிவு நிலை குன்றாது பாடல்களை இயற்வல்ல புலவர்களுக்கும், உணர்நிலை திரியாது பாட வேண்டிய பாணர்களுக்கும் காரணம் கருதியே மன்னன் தேறலை வழங்கினான் எனப் பதிற்றுப்பத்து பாடலுக்கு (40) உரை எழுதுகின்றார் ஒளவை சு. துரைசாமிப்பிள்ளை.

தோப்பி, நறவு போன்றவை தற்கால பியர்(டீநநச) வகையைச் சார்ந்ததாகவும், மணங்கமழ் தேறல், பூக்கமழ் தேறல் என்பன வைன்(றுiநெ) வகையோடு ஒத்ததாகவும், தேக்கள் போன்றவை தற்போதைய விஸ்கி வகைகளுக்கு ஒத்ததாகவும் இருந்திருக்கின்றன.

முன்னோரது வாழ்வில் மது இரண்டற இணைந்து கொண்டமைக்குக் காரணம் அவர்கள் மதுவைப் பயன்படுத்திய முறைகளும் நோக்கங்களுமே.

போர் வீரர்கள் கள்ளைப் பெரிதும் விரும்பி உண்டிருக்கின்றனர். கள் அருந்திய பின் ஏற்படும் புளிப்புச் சுவையைப் போக்க, களாம்பழம் துடரிப்பழம், கருநாவற் பழம் போன்றவற்றை உண்டிருக்கின்றனர். இப்பழங்கள் நீர் வேட்கையைப் போக்கியதுடன் வலிமையை வழங்கின.

படைத்தலைவன் ஒருவன் போருக்குச் செல்லத் தயாராகின்றான். அது ஒரு குளிர்காலம். நடுக்கம் தரும் குளிரில் இருந்து உடலைப் பாதுகாக்கக் கள் அருந்துகின்றான். அது உடலுக்கு வெம்மையளித்துக் குளிரைப் போக்குகின்றது.

அக்காலப் பயணங்கள் பெரும்பாலும் வழி நடையாகவே இருந்தன. பாணர் பொருநர் என்போர் ஊரூராக நடந்து சென்று பாடிப் பரிசில் பெறுவர். அவ்வாறு சென்ற பாணர்களுக்கு ஏவல் மகளிர் கள் வழங்கி வழிநடைக் களைப்பைப் போக்குவர்.

பரிசில் பெற வழிநடையாகச் சென்ற பாணர்களுக்கு ஏவல் மகளிர் பொன்னாற் செய்த வட்டில் நிறையக் கள்ளினை அளித்தனர். அக் கள்ளினைப் பாணர்; பருகி வழிநடையால் ஏற்பட்ட உடல் வலியைப் போக்கிக் கொண்டனர். போதைக்கு மட்டுமின்றி உடல் வலியைப் போக்குவதற்கும் அக்கால மக்கள் கள் பருகினர்.

வைகை ஆற்றில் நீராடிய பெண்ணொருத்தியின்உடல் ஈரம் நிறைந்து குளிர்மை பெற்றிருந்தது. உடற் குளிர்மையைப் போக்க வெப்பம் தரும் கள்ளை அருந்தினாள். ‘நெய்தற் பூ போன்று கருமையாக இருந்த கண்கள் கள்ளுண்ட பின், நறவம் பூப்போல் சிவந்தன’ எனப் பரிபாடல் கூறுகின்றது.

சங்ககால மாந்தரின் வாழ்வுச் சிறப்பிற்கான முதன்மைக் காரணம் மன்னனுக்கும் மக்களுக்கும் இடையிருந்த அன்புறவே. தகைசான்ற புவலர்களும் கலைஞர்களும் இந்த அன்புப் பாலத்தை அமைத்துக் காத்தனர். இந்த அன்புறவின் அடையாளமாக மன்னரும் மக்களும் கூடியிருந்து குடித்துண்டு களித்திருக்கின்றனர். அக்காலத்தில் மன்னருக்கும் மக்களுக்குமிடையான அதிகார இடைவெளிகளைப் போக்கியதில் மதுவுக்கும் ஒரு மகத்தான பங்கிருந்திருக்கின்றது.

இலக்கியங்கள் கள்ளோடு தொடர்புபட்ட பல செய்திகளைச் சுவைபட வெளிப்படுத்துகின்றன.

பட்டினப்பாலை என்ற இலக்கியம் இல் வாழ்வோடு இணைந்த கள் பற்றிய ஓர் ஓவியத்தை அழகுறத் தீட்டியிருக்கின்றது.

முன்னிரவுப் பொழுதில் வளைந்த கட்டுமரங்களில் மீன் பிடிக்கச் சென்ற பரதவர் நேரத்தைக் கணித்த விதம் புதுமையானதாக இருந்தது. கரைகளில் எழுந்து நிற்கும் வீட்டு மாடங்களில் ஒளிரும் விளக்குகளை எண்ணிக்கொள்வர். இரவு கடந்து செல்லச் செல்ல அணைக்கப்பட்ட விளக்குகளின் அளவைக் கொண்டுநேரத்தைக் கணிப்பராம். ஆயினும் சில விளக்குகள் கடையாமம் கடந்தும் அணையாதிருக்குமாம்.

ஏன் தெரியுமா?

செல்வச் செழிப்பு மிக்க கடற்கரை மாடி வீடுகளில் வாழ்ந்த மங்கையர் பாடல் கேட்டும், நாடகங்கள் பார்த்தும் வெண்ணிலவில் மகிழ்ந்தனர். துணைவரோடு கூடி இன்புறுவதற்காக அணிந்திருந்திருந்த பட்டாடைகளை நீக்கி மென்மையான நூலாடைகளை அணிந்தனர். இன்ப உணர்வு உச்சி தொட மென்மையான போதை தருகின்ற மட்டு என்ற பானத்தை அருந்தாது, அதிக மயக்கம் தரவல்ல ‘மது’ வை அருந்தினர். மதுவில் மதி நிலைதடுமாறி கணவரது மாலைகளை அணிந்தனர். கணவன்மார் ஒன்றும் நிதானத்தில் இருக்கவில்லை. பெண்கள் அணியும் மாலைகளை அவர்கள் சூடிக் கொண்டனர். கடையாமம் கடந்தும் விளக்குகளை அணைக்க மறந்து இன்ப மயக்கத்தில் மூழ்கி உறங்கினர்.

“துணைப் புணர்ந்த மட மங்கையர்
பட்டு நீக்கித் துகில் உடுத்தும்
மட்டு நீக்கி மது மகிழ்ந்தும்
மைந்தர் கண்ணி மகளிர் சூடவும்
மகளிர் கோதை மைந்தர் மலையவும்
நெடுங்கால் மாடத்து ஒள்எரி நோக்கிக்
கொடுந் திமில் பரதவர் குருஉச்சுடர் எண்ணவும்
பாடல் ஓர்ந்தும் நாடகம் நயந்தும்
வெண் நிலவின் பயன் துய்த்தும்
கண் அடைஇய கடைக் கங்குலான்”(பட்டினப்பாலை 106- 115)

சங்கத்தமிழரின் ‘மதுமகிழ்’ வாழ்விற்கு அழகிய சாட்சியாகின்றது  இப்பட்டினப்பாலைப ;;பாடல். மட்டு என்பதற்குக் ‘காமபானம்’ என விளக்கம் தருகின்றார் நச்சினார்க்கினியர்.

ஆமூர் என்ற ஊரைக் குறிப்பிட வேண்டிய சாத்தந்தையார் என்ற புலவர் ஊரினது வேறு எந்த அழகினையும் அடைமொழியாகக் கொள்ளாமல்,

“இன் கடும் கள்ளின் ஆமூர்” (புறம் 80)

என்கின்றார். இனிமை தருகின்ற கடும் போதையேற்றுகின்ற கள்ளினைக் கொண்ட ஊர் என்று ஆமூர் சிறப்பிக்கப்படுவது அக்காலத்தில் கள்ளுக்கிருந்த கௌரவத்தைப் புலப்படுத்துகின்றது.

பாலை பாடிய பெருங்கடுக்கோ என்பார், சோழ மன்னனின் சிறப்பைக் குறிப்பிடுகையில்,

“இன்கடுங் கள்ளின் இழையணி நெடுந்தேர்க் கொற்றச் சோழர்..”(நற்றிணை 10)

என்கிறார். ‘இனிப்புடையதும் கடு;ப்புடையதுமாகிய கள்ளுணவைக் கொண்டோர்’ என்ற அடைமொழிகளால் சோழர் பெருமைப்படுத்தப்படுவதுடன் கள்ளும் பெருமையுறுகின்றது.

பாண்டியன் நெடுஞ்செழியனை வாழ்த்திய மாங்குடி மருதனார் என்னும் புலவர்,

“ஒண்டொடி மகளிர் பொலங்கலந் தேந்திய
தண்கமழ் தேறல் மடுப்ப மகிழ்சிறந்து
ஆங்கினிது ஒழுகுமதி”(மதுரைக்காஞ்சி 24)

எனக் குறிப்பிடுகின்றார்.

நாட்பட்ட கள் கடும் போதைத்தன்மை கொண்டதாக இருக்கும். அக்கள் தேள் கொட்டுவதைப் போன்ற தன்மை கொண்டது என்பதையும், பாம்பின் நச்சுக்கடிக்கு ஒப்பான போதையைத் தரவல்லது என்பதையும்,

“தேட் கடுப்பன்ன நாட்படு தேறல்”(புறம் 392)
“அரவு வெகுண்டன்ன தேறல்”(புறம் 376)

என்ற வரிகளால் புறநானூறு கூறுகின்றது.

கொடைவள்ளலான பாரி மதுவை வாரி வழங்குவதிலும் சளைத்தவன் அல்ல. பாரி இறந்தபின் புலவர் கபிலர் பல கையறுநிலைப் பாடல்களைப் பாடுகின்றார்.

பாரி இருந்தபோது,மதுவூற்றும் சாடிகள் எப்போதும் திறந்தே கிடக்கும் எனவும், ஆட்டு ஊன் சோறும் இடையறாது கிடைக்கும் என்பதையும்,

“மட்டு வாய் திறப்பவும் மைவிடை வீழ்ப்பதும்’
அட்டான் றானாக் கொழுந்துவை யூன்சோறும்..”(புறநானூறு. 113) என்ற வரிகளால் கூறுகின்றார்.

‘பாரியின் பறம்புமலையில் வடிக்கப்பட்ட கள்ளின் கழிவுகள் யானையின் சாணம் போல் குவிந்து கிடக்கும்’ எனக் கபிலர் மேலும் குறிப்பிடுகின்றார்.

“களிறுமென் றிட்ட கவளம் போல
நறவுப்பிழிந் திட்ட கோதுடைச் சிதறல் (புறா. 114)

சேரமான் செல்வக் கடுங்கோ வாழியாதன் புலவர்க்கும் பாணர்க்கும் மழை பொழிவதுபோல் கள்ளை வழங்கினான் என்ற செய்தியை பதிற்றுப்பத்து எனும் இலக்கியத்தின் 65ம் பாட்ல கூறுகின்றது.

‘சேரன் செங்குட்டுவனது அரண்மனையில் கோக்காலியில் வைக்கப்பட்டிருக்கும் பானையில் கள் எப்போதும் குறையாதிருக்கும்’ எனப் பதிற்றுப்பத்தின் ஏறாவேணி பாடற்பகுதி கூறுகின்றது.

கட்பானையின் மேற்புறத்திற் சந்தனம் பூசப்பட்டிருந்தது. இஞ்சியும் நறும்பூவும் சேர்த்துத் தொடுத்த மாலை கட்டப்பட்டிருந்தது. இதனைப் பரணர் தன் பாடலில் ‘மணிநிற மட்டம்’ எனக் குறிப்பிடுகின்றார்.

உள்நாட்டு மதுவகைகள் மட்டுமன்றி,‘வெளிநாட்டுச் சரக்கு’ களும் நம் முன்னோரால் பயன்படுத்தப்பட்டுள்ளன. அக்காலத்தே யவனர் என அழைக்கப்பட்ட கிரேக்க நாட்டவர் தமிழரோடு பெரும் வணிகத் தொடர்புகளைக் கொண்டிருந்தனர். இந்த வணிக உறவுகளின்போது மது வகையாறாக்களும் குறிப்பிடத்தக்களவு இடம் பெற்றிருந்தன என்பதை,
“யவனர் நன்கலம் தந்த தண்கமழ் தேறல்”  (புறம் 56) என்ற புறநானூற்று வரியால் அறியலாம்.

மேல்நாட்டுக் குடிவகைகள் ஒருபுறமிருக்க, இத்துணைச் சிறப்பு மிக்க உள்நாட்டுக் குடிவகைகளைப் படைத்துக் காட்டிய எம் பழங்குடி மக்களின் ‘கள்’ அறிவு பெரு வியப்பை ஏற்படுத்துகின்றது.

பண்டைத் தமிழரின் பல்வகைச் சிறப்புகளில் மதுப்பயன்பாடு பெருவளர்ச்சியுற்றிருந்தமையை மேற்கண்ட இலக்கியச் சான்றுகளால் நாம் அறிந்துகொள்ள முடியும்.

அரசர் குடிமக்கள், ஆடவர் பெண்டிர், கற்றோர் கல்லாதார் என்ற வேறுபாடுகள் இன்றி மதுவுண்டு மகிழ்ந்த காலமாகச் சங்ககாலம் திகழ்ந்திருக்கின்றது. களித்தல் என்கின்ற மனநிலையைப் பெறவே கள்ளுண்டனர். பெரும்பாலும் கூடியே குடித்துக் களித்திருக்கின்றனர்.  குடிப்பழக்கத்தின் தீமையால் சமூகம் பாதிக்கப்பட்டதான செய்திகள் சங்க இலக்கியங்களில் காணப்படவில்லை.

எனினும் பாரியின் நண்பரான கபிலர் மதுப்பயன்பாட்டிற்கு மாறான தன் உணர்வைச் சில இடங்களில் புலப்படுத்தியிருக்கின்றார். பாரியின் மது வள்ளமை பற்றிக் குறிப்பிட்ட கபிலர் அதனைப் போற்றியதாகத் தெரியவில்லை. பறம்புமலை அரசின் மதுக்கழிவுகளை யானையின் சாணத்திற்கு ஒப்பிட்டமை மது பற்றிய அவரது வெறுப்புணர்வின் அடையாளமாக இருக்கலாம்.

குடிப்பழக்கத்திற்கு எதிராகத் தன் கருத்தைப் புறநானூற்றின் 123வது பாடலில் பதிவு செய்திருக்கின்றார்.

“நாட்கள் உண்டு நாண்மகிழ் மகிழின்
          யார்க்கும் எளிதே தேர்ஈதல்லே
          தொலையா நல்லிசை விளக்கும் மலையன்
          மகிழா தீத்த இழையணி நெடுந்தேர்
          பயன்கெழு முள்ளுர் மீமிசைப்
          பட்ட மாரி உறையினும் பலவே”    (புறம். 123)

மலையமான் திருமுடிக்காரி என்ற மற்றுமொரு கொடை வள்ளலைச் சந்தித்த கபிலர்,“ நாட்பட்ட போதை மிக்க கள்ளைப் பருகி ஏற்பட்ட மதிமயக்கத்தினால் தேரினைஈதல் எல்லோருக்கும் எளிது. அவ்வாறு மது அருந்தாது வருவோரின் தேவையறிந்து வழங்கும் மலையமானின் கொடையே முள்ளுர் மலைகளில் பெய்த மழைத்துளிகளிலும் பெரிது” என்கிறார்.

பற்றிப் படரக் கொம்பின்றித் தவித்த முல்லைக்குத் தேர் கொடுத்து ஈகைக்கு இலக்கணமானவன் பாரி என்ற வரலாற்று வழி வந்த செய்தியை ஐயுறச் செய்கிறது பாரியின் உற்ற நண்பரான கபிலரின் இப்பாடல்.

‘பல நாட்கள் பாதுகாக்கப்பட்டு போதையேற்றப்பட்ட மது அருந்திய மயக்கத்ததினாற்றான் பாரி முல்லைக்குமணிகளால் அழகுபடுத்தப்பட்டநெடிய தேரினைக் கொடுத்தான். அவ்வாறு போதையிற் கொடுத்த கொடை பெரிதன்று’ என்கிறார் கபிலர்.

எனினும் புறநானூற்றின் 200வது பாடலில்,

“இவரே, பூத்தலை யறாஅப் புனைகொடி முல்லை
நாத்தழும் பிருப்பப் பாடா தாயினும்
கறங்குமணி நெடுந்தேர் கொள்கெனக் கொடுத்த
பரந்தோங்கு சிறப்பிற் பாரி மகளிர்...”

                               எனப் பாரியின் கொடைத்திறத்தைப் புகழ்ந்தவரும் கபிலரேயாவார்.

மது பற்றித் திருமுடிக்காரிக்கு மற்றுமொரு விளக்கமும் தருகின்றார் கபிலர்.

“உழுத நோன்பகடு அழிதின்றாங்கு
நல்அமிழ்தாகநீ நயந்துண்ணு நறவே’’ (புறம். 125)

‘நாள் முழுவதும் உழவனோடு பணியாற்றிய காளை மாலைப்பொழுதில் ஒய்வாக இரை மீட்பதைப் போல, பகற்பொழுதின் பணியெல்லாம் முடிந்த பிறகு மாலையில் ஒய்வாக மது அருந்தலாம்’ என்கின்றார்.

கபிலருக்கு அடுத்து, மதுப்பழக்கத்திற்கு எதிராகவும் வலுவாகவும் எழுந்த குரல் வள்ளுவருடையது.

சங்ககாலத்தின் பிற்பகுதிகளில் குடிப்பழக்கம் பல்கிப்பெருகிச் சமூகச் சீர்கேடுகளுக்கு வழிவகுத்திருக்க வாய்ப்பு உண்டு. வள்ளுவரின் குடிக்கெதிரான கடும்போக்கிற்கு இச்சீர்கேடுகளே காரணமாகவிருக்கலாம்.

சங்ககாலப் பிற்பகுதிகளில் தமிழகத்தில் காலூன்றிய சமண, பௌத்த மதங்கள் மக்களின் வாழ்வை ஒழுங்குபடுத்த முயன்றன. அதன்விளைவாகச் சமூகச் சீர்கேடுகளில் ஒன்றாக மதுப்பழக்கம் கருதப்படலாயிற்று.

எனினும் சங்ககால மாந்தரது மதுப்பயன்பாடு பெருந்தீமைகளை விளைவிக்காத ஒன்றாக,உடற்களைப்பைப் போக்கும் வகையிலும் களிப்புணர்வைத் தூண்டிக் கூடி மகிழும் நோக்கிலுமே இருந்தது என்பதைச் சங்கப்பாடல்கள் தெளிவுபடுத்துகின்றன.     


துணை நின்ற நூல்களும் இணையத்தளங்களும்:

தமிழக வரலாறு – மக்களும் பண்பாடும் -  டாக்டர் கே. கே. பிள்ளை  
தமிழர் நாகரிகமும் பண்பாடும் -  முனைவர் இ. தட்சணாமூர்த்தி
சங்ககாலத்து உணவும் உடையும்: மா.இராசமாணிக்கனார்.
புறநானூறு
பெரும்பாணாற்றுப்படை
பரிபாடல்
மதுரைக்காஞ்சி
நற்றிணை
பதிற்றுப்பத்து
பட்டினப்பாலை

gl;bdg;ghiy
http://omsakthionline.com/?katturai=சிறியகள்-பெறினே&publish=3889 http://www.varalaaru.com/design/article.aspx?ArticleID=543





1 comment:

  1. மிக மிக அதிசயமான சான்றுகள்

    ReplyDelete